
காலைக் கதிரின் கனிந்த தீண்டலிலும் மாலை மயங்கும் அந்தியின் தழுவலிலும் இரவில் பூக்கும் முழுமை நிலவின் குளிர்ந்த தடவலிலும் கடற்கரைக் கோயிலில் இருக்க நேர்ந்தால், கலையின் உயிர்ப்பைக் கண்களைப் போலவே உள்ளமும் பருகும். தொட்டும் அணைத்தும் தொலைவில் நின்றும் பேசியும் பேசாமலும் ஆசையாய்ப் பார்த்தால், இந்தக் கற்கட்டுமானங்களின் பின்னிருக்கும் கலைஞர்களின் கனவுக் கண்களைச் சந்திக்கலாம். அந்தக் கண்கள், கலைநீரோட்டத்தில் அழியாக் கவிதைகளாய் அவர்கள் அமைத்த படைப்புகளின் சமுதாயப் பின்புலத்தைக் காட்டுவதுடன், கலையில் கரைந்து கட்டுமானமெங்கும் பரவியிருக்கும் அவர்களின் ஆத்மாவையும் அடையாளப்படுத்தும். ஓயாது வந்து கரைமோதி உடையும் அலைகளும் இந்த இரகசிய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆவலில்தானே பெருங்குரலெழுப்பிப் பேதலித்துத் திரும்புகின்றன!
No comments:
Post a Comment